தமிழக அரசின் தன்னிச்சையான முடிவால் சம்பா சாகுபடி பாதிப்பு- 110 நாட்கள் நீர் வழங்க கோரி விவசாயி சங்க மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் கண்டனம்
திருச்சி 3.09.2026
சம்பா சாகுபடிக்கு 110 நாட்களுக்கு காவிரி நீர் வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
சம்பா பயிர் சாகுபடிக்கு 130 நாட்கள் தேவைப்படும் நிலையில் 45 நாட்களுக்கு மட்டுமே நீர் வழங்கப்படும் என்ற அரசு அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயன் தராது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மட்டுமே இது உதவும். கடந்த காலங்களில் விவசாய பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர் குழுவைக் கூட்டி ஆலோசித்த பிறகே தண்ணீர் திறப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசு விவசாயிகள் அல்லது சங்கத் தலைவர்களிடம் எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.
சம்பா சாகுபடியைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் குறைந்தபட்சம் 90 முதல் 110 நாட்களுக்குக் காவேரி நீர் வழங்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவ்வாறு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே விவசாயிகள் சம்பா சாகுபடியைத் தொடங்க முடியும். அரசுத் தரப்பில் தூர்வாரும் பணிகள் 100% முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், கள நிலவரப்படி 70% முதல் 80% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. எனவே, கடைமடைப் பகுதி வரை நீர் சென்றடையும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முழுமையாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்..