22 ஆண்டுகால அர்ப்பணிப்பு! திருச்சி சந்தோஷ் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘மாற்றம்’ அமைப்பு பாராட்டு
திருச்சி 5.09.2026
*திருச்சியில் நெகிழ்ச்சி ஆசிரியர் தினத்தில் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘மாற்றம்’ அமைப்பு கௌரவம்*
திருச்சியில் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்புப் பள்ளியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ அமைப்பின் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இப் பள்ளியில், 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக் குழந்தைகளுக்குச் சிறப்பான கல்வியை வழங்குவதோடு, அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் உயரிய பணியைத் தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமையிலான குழுவினர் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.
ஆசிரியைகள் லீமா தேவி, ஆசிரியர் கோகுல் ராஜ் மற்றும் உதவியாளர்கள் சூர்யா, யுவராணி ஆகியோரின் இந்தத் தன்னலமற்ற மகத்தான பணியினைப் போற்றும் வகையில், அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளுடன் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய, மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும், இயக்குனரும், ‘மாற்றம்’ அமைப்பின் நிறுவனத் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதிஷ் ஜான், சாக்ஸிடு அமைப்பைச் சேர்ந்த சசி, சமூகச் செயற்பாட்டாளர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் திரளான சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்காக இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் உருவாக்கிய வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தில், இச்சந்தோஷ் சிறப்புப் பள்ளி மாணவ-மாணவிகள் திறம்பட நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.