திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சி அதிரடி-100 நாட்களில் 10 லட்சம் உறுப்பினர்கள் சாதனை- உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கட்சி அறிவிப்பு
திருச்சி 10.09.2026
லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சதாம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் மாவட்டச் செயலாளர் தில்லை சுபாஷ் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர். இதில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா செய்தியாளர்களிடம் கூறுகையில்..
எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் கட்சி தொடங்கப்பட்டு என்னை பொதுச் செயலாளராக அறிமுகம் செய்து 100 நாட்கள் நிறைவடைகின்றன. இந்த குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் 73 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல மாநில அமைப்புச் செயலாளர்களை நியமித்துள்ளோம். இணையதளம் மற்றும் படிவங்கள் மூலம் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாமில், ஒரே நாளில் 1,25,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்து சாதனை படைத்துள்ளனர். இது எங்கள் தலைவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இலவசக் கல்வி, இலவச மருத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை முக்கியக் கொள்கைகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். எங்கள் அடுத்தகட்ட இலக்கு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்தான். அதில் அனைத்து இடங்களிலும் போட்டியிடவுள்ளோம். கூடிய விரைவில் திருச்சியில் மிகப்பெரிய பிரம்மாண்ட மாநாடும் நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசுக்கு மாற்றாக தவெக-வை மக்கள் பார்த்த நிலையில், தற்போதைய சூழல் மோசமாகவே உள்ளது. லாக்கப் மரணங்கள், பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளன. இந்த இடைத் தேர்தல் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது மக்கள் இன்னும் மாறவில்லை என தெரிவித்தார்.