Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் மருத்துவ சாதனை: 33 வயது பெண்ணின் மூளையில் இருந்த டென்னிஸ் பந்து அளவிலான கட்டி 6 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக அகற்றம்.

0

திருச்சி 18.08.2026

33 வயது பெண்ணின் மூளையில் இருந்த டென்னிஸ் பந்து அளவு கட்டி அகற்றம்

கியூரிஸ் வேலன் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

திருச்சி ஜிகார்னர் பகுதியில் உள்ள கியூரிஸ் வேலன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஹரசுதன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு 33 வயதுடைய பெண் ஒருவர், முகத்தில் ஒரு பக்கம் இடைவிடாது துடிப்பு ஏற்படுவதாகவும், காது கேட்கும் திறன் குறைந்து கொண்டே வருவதாகவும் கூறி சிகிச்சைக்காக வந்தார். அவரைப் பரிசோதித்தபோது, மூளைக்குள் சிறுமூளையை நன்கு அழுத்தியபடி டென்னிஸ் பந்து அளவுக்குக் கட்டி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

இந்தக் கட்டி காது, முகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்திக்கொண்டிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை நோயாளியிடம் தெரிவித்தபோது அவரும் அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தார்.

இதையடுத்து மருத்துவக் குழுவினர் தயார் செய்யப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் ஒத்திகை பார்க்கப்பட்டது. மறுநாள் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, மூளையைத் திறந்து உள்ளே அழுத்திக்கொண்டிருந்த கட்டி மெதுவாக அகற்றப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சவாலான அறுவை சிகிச்சையில், 90 சதவீதக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இதுபோன்ற கட்டிகள் மூளைக்குள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கண்டறிவது கடினமாகும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது பூரண நலத்துடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் ராம்கோபால் கூறுகையில், ‘‘நான் 30 ஆண்டுகளில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளின்போது மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது நடைபெற்ற அறுவை சிகிச்சையானது, நோயாளியை தலைகுப்புறப் படுக்க வைத்து மூளையின் ஓடுகளைத் திறந்து செய்யப்படும் மிகவும் சவாலான ஒன்றாகும். இதில் சரியான அளவில் மயக்க மருந்து கொடுத்து நோயாளியைச் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் நுட்பமானது. அது தற்போது சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கியூரிஸ் வேலன் மருத்துவமனையின் மண்டல தலைமை அதிகாரி அஸ்வதி கூறுகையில், ‘‘திருச்சி திருவானைக்காவல், தில்லை நகர் ஆகிய இடங்களில் ஏற்கனவே கியூரிஸ் மருத்துவமனையின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. ஜிகார்னர் பகுதியில் உள்ள கியூரிஸ் வேலன் மருத்துவமனை ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ சிகிச்சை மையமாக இயங்கி வருகிறது. இங்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் நவீன முறையில் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருவதால்தான் இதுபோன்ற சவாலான அறுவை சிகிச்சையை டாக்டர்களால் வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது’’ என்றார்.

இந்தச் சந்திப்பின் போது வேலன் மருத்துவமனை டாக்டர் தேம்பவாணி,மயக்கியவியல் நிபுணர் டாக்டர் கார்த்திகா ஆகியோர் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.