சர்வதேச நாட்டுப்புற நடன போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி மாணவிகள்
திருச்சி 12.05.2025
*சர்வதேச நாட்டுப்புற நடன போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி மாணவிகள்*
கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற மாகாணத்தில் நடைபெற்ற கப் ஆஃப் காஸ்டஸ் 2025, 15-வது சர்வதேச கலை திருவிழாவில் நடைபெற்ற நடன போட்டியில், திருச்சி, காட்டூர் பகுதியை சேர்ந்த சாம்ஸ் டான்ஸ் அகாடமி (தனியார் அகாடமி) சார்பில் 11 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 12 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். ஐந்து முதல் பதினாறு வயது வரையும், 16 வயது முதல் 25 வயது வரையும், 26 வயது முதல் அதற்கு மேல் வயது உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடைபெற்றது.
அதில் இந்திய நாட்டின் சார்பில் தமிழகம் குறிப்பாக திருச்சி காட்டூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று கட்டையாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவற்றில் நடனமாடி ஒட்டுமொத்த தங்கப் பதக்கத்தை பெற்று வந்துள்ளனர்.
ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் பல்கேரியா, அர்மேனியா, ஆஸ்திரியா, செக்குடியரசு, உக்ரைன், பெல்லாரஷ், அசர்பெய்ஜான், ஹங்கேரி போன்ற பல்வேறு நாடுகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டியில் , திருச்சியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கத்துடன் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாட்டின் கலைகளை வெளிநாட்டினர் வியந்து பாராட்டியதாகவும், தாங்கள் வெற்றி பெற்ற போது அனைவரும் உற்சாகப்படுத்தியதாகவும் மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.