திருச்சியில் 38 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்! நிகழ்ச்சியில் கலெக்டர், மேயர் பங்கேற்பு!
திருச்சியில் 38 முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.
திருச்சியில் 38 முதல்வர் மருந்தகங்கள்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.
தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பு:
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது.
இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது.